நன்றி!

வருகை தந்தமைக்கு நன்றி! தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன!

Tuesday, July 6, 2010

வையகம் புகழும் வேந்தே!

தேவர் திருமகனைப் பற்றி
டி.வி.பச்சையப்பன் எழுதிய என்னைக் கலங்கடித்த பாடல் ஒன்று
இதோ வாசகர்களுக்காக...


தொகையறா
வையகம் புகழும் வேந்தே! வண்டமிழர் குல விளக்கே!
தென்னகத்து வீரசிங்கம்! தென்பாண்டி வீரமுத்தே!
வையகம் காண்பதெப்போ வைரமுத்து ராமலிங்கம்!
சோகம் நிறைந்தகதை சொன்னாலும் முடிவதில்லை!

பாடல்
தென்னாட்டு வீரசிங்கம் தேவர்முத்து ராமலிங்கம்
மக்களைத் தவிக்கவிட்டு மரணமான சேதிகேட்டு
மனங் கலங்கிட லானோம்-அந்த
மலர்ந்த முகத்தக் காணோம்

மாநிலத்து மாவீரன் நல்லமுத்து ராமலிங்கம்
நான்மாடக் கூடல்என்ற நலமான மதுரையிலே
நம்மை விட்டுப் பிரிந்தார்-அய்யோ
நலிந்து மக்கள் துடித்தார்

வீரனுக்கு வீரனாவார் வேந்தனுக்குத் தலைவனாவார்
அஞ்சாத வீரனாவார் ஐம்பத்தாறு வயதுமாவார்
அவனி புகழ் வாழ்ந்தார்-நல்ல
அமர வாழ்வு கொண்டார்

உலகத்தில் மூத்தகுடி உத்தமர்கள் வாழ்ந்தகுடி
அறம்பொருள் இன்பம் பேசி அவனியிலே வாழ்ந்தகுடி
அருமை யான நாடு- தமிழ்
அறிஞர் போற்றும் நாடு

தெய்வபக்தர் உக்ரபாண்டித் தேவர்பெற்ற வீரமகன்
காலமான சேதிகேட்டு காண்பதெப்போ என்றுமக்கள்
இதயங் கலங்க லாச்சு- நம்ம
இன்ப வாழ்வு போச்சு

மங்காத வீரமகன் மதுரை மகாலட்சுமி மில்லில்
பாட்டாளி துயரைக்கண்டு பக்குவமாய் நீதிகேட்டு
வெற்றி வாகை பெற்றார்- நல்ல
வீர ராக வாழ்ந்தார்

வெள்ளையரின் ஆதிக்கத்தை விரட்டியடிக்க வேணுமுன்னு
வீறுகொண்ட தேவர்மகன் ஆவேசமாய்க் குதித்தார்
ஆங்கி லேயரை எதிர்த்தார்- தேவர்
அறிஞ ராக வாழ்ந்தார்

மக்களின்றி மனைவியின்றி மனசுக்குள்ளே கபடமின்றி
மாசில்லாத சேவைசெய்து மாண்டும் தெய்வமானார்
மனங் கலங்கிடும் துயரம்- மக்களின்
இருந்து கேளும் விவரம்

புதுக்கோட்டை நகரத்திலே பொல்லாத சிறையினிலே
பொய்யாகக் கேசுபோட்டு பூட்டினார்கள் உள்ளே
தங்கஉடம்பு கெட்டுப் போச்சு- பார்த்த
மக்கள் தவிக்க லாச்சு
பொல்லாத நோயினிலே பொன்னான மேனிகெட்டு
மாவீரன் இல்லத்திலே மாறாத கவலைப்பட்டு
நாளுக்கு நாள் மெலிந்தார்- அறிந்த
நாட்டு மக்கள் துடித்தார்

ஐந்துமாசம் மதுரையிலும் அதன்பிறகு வேலூரிலும்
செய்துவந்த சிகிச்சையிலே சிறிதளவு குணமடைந்தார்
தெம்பு பெற்று நடந்தார்- தேவர்
திருந கரிலே இருந்தார்

மதுரை மாநகரத்திலே மகிழ்ச்சியோடு இருக்கையிலே
மறுபடி உடல்நிலையும் மோசமாகிப் போச்சு- அய்யோ
மாளும் நிலைமையாச்சு- மதுரை
சோக நிலை யாச்சு

எல்லாம் ஒடுங்கிப்போச்சு செவ்வாய்க் கிழமையாச்சு
தேதிஇருபத் தொன்பதாச்சு விடியக்கால நேரமாச்சு
ஆவி பிரிய லாச்சு- இந்த
அகிலம் இருண்டு போச்சு

அறுபத்தி மூணாம்ஆண்டு அக்டோபர் மாதம் புதன்
திக்கெட்டும் பரவலாச்சு தேவர்மகன் இறந்தசேதி
கேட்டு மக்கள் துடித்தார்- அன்று
தேம்பி அழுது புரண்டார்

பசும்பொன்னில் அடக்கஞ்செய்யத் தேவர் சொன்ன சொல்லாதலால்
ஆம்புலன்ஸ் காரதனில் அதிவிரைவில் கொண்டுசென்றார்
ஆறாய் கண்ணீர் பெருக- மக்கள்
அழுது கண்ணீர் வடிக்க

வீரன் மாண்ட சேதிகேட்டு வேதனையால் மக்கள்வெள்ளம்
லாரி,பஸ்ஸில்,சைக்கிள்,பிளசர்,ரயில்களிலும் வந்திடவே
சாரை சாரை யாக- மக்கள்
சாலை யிலும் நடந்தார்

தேவருக்கு ஆத்மதோழர் மூக்கைய்யாத் தேவரவர்
சீமைச்சாமி மலைச்சாமி சின்னக் கருப்பத்தேவர்
சிந்தை நொந்து கூட- மக்கள்
திரண்டு நின்று அழுக

மதுரைமுத்து என்னெம்மார் சுப்பு ராமன்
திரைநடிகர் எஸ்எஸ்ஸாரு அன்பழகன் என்வி நின்று
தேம்பித் தேம்பி அழுதார்- தேவருக்கு
இறுதி அஞ்சலி செய்தார்

தென்னாட்டுக் காந்திஅண்ணா புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர்
காரைக்குடி கணேசன் கண்ணகி சக்திமோகன்
கண்ணீரைத் தான் சிந்த- அனைத்துக்
கட்சிக் கொடியும் இறங்க

மதுரைநகரத் தலைவர்வந்தார் மந்திரிராமையா கூடவந்தார்
தங்கமணி ராமமூர்த்தி சந்தானமும் கூடவந்தார்
சமுத்திரம் போல் ஜனங்கள்- தேவர்
திருமுகத் தினை வணங்க

சிவகங்கை ராமநாடு மன்னர்களும் வந்திருந்தார்
கடல் கடந்த மக்களெல்லாம் கதறித்தந்தி கொடுத்திடவே
காண எண்ணித் துடித்தார்-மக்கள்
கண் கலங்கி அழுதார்

பொழுது புலர்ந்ததப்பா புதன்கிழமை யானதப்பா
அழுது புரண்டார்கள் அய்யோஅய்யோ என்றுசொல்லி
சொர்க்க லோகத் தேரு- அங்கே
சொகுசா நிக்குது பாரு

போலீசுக் காவலாளி பொழுதெல்லாம் வேலைசெய்து
போக்கு வரத்துக்களை பொறுப்போடு செய்துவந்தார்
நடுப் பகலு மாச்சு- இரண்டு
மயில்கள் வரவு மாச்சு

பைந்தமிழர் கூடிவிட்டார் பல்லாக்கையும் தூக்கிவிட்டார்
நானிலத்து மாவீரன் நல்லமுத்து ராமலிங்கம்
வான லோகம் செல்ல- மக்கள்
மலரைத் தூவி வணங்க

பசும்பொன்னில் அடக்கம்செய்து பக்குவமாய் மேடை செய்தார்
நவம்பர் ஒன்னாந்தேதி நாட்டிலுள்ள கடைஅடைத்தார்
தேவரு டைய மரணம்- இந்தத்
தேசத்துக் கொரு துயரம்

No comments:

Post a Comment